Skip to main content

ராகு- கேது பெயர்ச்சி பொதுக்குறிப்பு



பொதுக்குறிப்பு
நந்தன வருடம், கார்த்திகை மாதம் 17-ஆம் தேதி (2-12-2012) வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை சுமார் 10.30 மணி அளவில் துலா ராசிக்கு ராகுவும், மேஷ ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகின்றனர். இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள். ஜயவருடம் ஆனி மாதம் 7-ஆம் தேதி (21-6-2014) அடுத்த ராகு- கேது பெயர்ச்சி! கன்னி ராசிக்கு ராகுவும் மீன ராசிக்கு கேதுவும் மாறுவார்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கங்களில் பல பஞ்சாங்கம் வெளியிடப் பட்டாலும், வாசன் திருக்கணித பஞ்சாங்கமே முக்கியமானதாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நந்தன வருடம், மார்கழி மாதம், 8-ஆம் தேதி (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை ராகு- கேது பெயர்ச்சி கணக்கிடப்படுகிறது.

இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையே இருபத்தொரு நாட்கள் வித்தியாசம் இருந்தாலும், பலன்கள் வித்தியாசப்படாது.. பெரும்பாலும் தமிழ்நாட்டுக் கோவில் ஸ்தலங்களில் எல்லாம் வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் ராகு- கேது பெயர்ச்சி விழாக்களும் பூஜைகளும் பரிகார உற்சவங்களும் நடக்கின்றன. எனவே நீங்களும் இந்தத் தேதியை (2-12-2012) கடைப்பிடிக்கலாம்; பரிகார பூஜை செய்துகொள்ளலாம்.

இந்த ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்- என்ன செய்யும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு ராகு- கேது யார்? அவர்களின் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம்!

நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு, ஆட்சி வீடு உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுகளுக்கு தனிக் கிழமை இல்லை. அப்படியென்றால் ராகுவும் கேதுவும் பலமில்லாத கிரகங்களா என்றால் அப்படியல்ல!

நவகிரகங்களில் சந்திரனும், அதைவிட செவ்வாயும், அதைவிட சனியும், அதைவிட குருவும், அதைவிட சுக்கிரனும், அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம்பெற்ற கிரகங்கள். சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பொருந்தியவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்கள் போலல்ல; அவை சாயா கிரகங்கள்- நிழல் கிரகங்கள் எனப்படும். ஆதியில் சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்கள்தான். ராகுவும்- கேதுவும் பிருகத் ஜாதக காலத்துக்குப் பிறகுதான் கணிக்கப்பட்டன. அதனால் அவர்களுக்கு ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு, பகை வீடு என்ற நிலை இல்லை. சில பஞ்சாங்கங்களிலும் ஜோதிட நூல்களிலும் ரிஷப ராசியும் விருச்சிக ராசியும் ராகு- கேதுவுக்கு உச்ச வீடு, நீச வீடு என்று கணக்கிடப்பட்டிருந்தாலும் அவை ஆதாரமற்றவை!

ராகுவுக்கும் கேதுவுக்கும் தனி ராசி, தனிக்கிழமை, தனி நாள் இல்லையென்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுவே ராகு காலம் எனப்படும். அதேபோல் கேதுவுக்கு உரிய நேரம் எமகண்டம் எனப்படும். ஆனால் ராகுவுக்கும் கேதுவுக்கும் தசை அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள்.. ராகு தசை 18 வருடம்; கேது தசை 7 வருடம்.

திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தில் கார்த்திகை நட்சத்திரம்தான் முதல் நட்சத்திரமாக இருந்திருக்கிறது. சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தில் இரண்டாவது பாடலில், "ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள் கேள் அவை தாம் அன்பொடு நல்ல நல்ல' என்று குறிப்பிட்டுள்ளார். "ஆதிரை, பரணி, கிருத்திகை, ஆயில்யம், முப்பூரம், கேட்டை, தீதுறு விசாகம், ஜோதி, சித்திரை, மகம் ஈராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே' என்று ஜோதிட விதியில் 12 நட்சத்திரங்களும் நல்லவையல்ல என்று சொல்லப்படுகிறது.

"என்பொடு கொம்பாடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்த மாலை புனல் சூடிவந்து என் உளமே புகுந்த அதனால், இந்த பன்னிரு நட்சத்திரங்களும் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். கார்த்திகை நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாகக் கணக்கிட்டால்தான் அவர் பாடிய ஒன்பதொடு என்பது பொருத்தமாக வரும். சில பஞ்சாங்கங்கள் தசாபுக்தி அட்டவணையில் சூரிய தசையே முதல் தசையாக, "கார்த்திகை- உத்திரம்- உத்திராடம்- சூரிய தசை 6 வருடம்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில்தான் ராகுவும் கேதுவும் பின்னால் சேர்க்கப்பட்ட கிரக தசையாக வரும்.

விண்வெளி விஞ்ஞானிகள் ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும்; மற்ற கிரகங்களின் நிழல் என்றும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வானவெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப்பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வட திசையில் ஏற்படும் சந்திப்பை ராகு  என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசை சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது மெய்ஞ்ஞானிகளும் முன்னோர்களும் ஜோதிட சாஸ்திர வல்லுநர்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று விஞ்ஞானிகளுக்கு முன்னதாகவே எழுதி வைத்துள்ளார்கள்.

சூரிய சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (ஆய்ற்ண் ஸ்ரீப்ர்ஸ்ரீந் ஜ்ண்ள்ங்) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தமமான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும். மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது, ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகுவும் கேதுவும் இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் 180-ஆவது டிகிரியில் வரும்போது பௌர்ணமியாகும். சூரியனுடன் ராகுவும், சுக்கிரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது  சந்திர கிரகணம் ஏற்படும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர்கோர்ட்டில் (டிகிரியில்)  சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜெபம் செய்வது இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞானகாரகன், மோட்சகாரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். "ராகுவைப் போல் கொடுப்பாரில்லை, கேதுவைப் போல் கெடுப்பாரில்லை' என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும், குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேதுக்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ கொடுப்பார்கள். ராகுவும் கேதுவும் குரூர கிரகங்கள்- அசுப கிரகங்கள்- பாப கிரகங்கள் ஆவார்கள். அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டுப் பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு 9-ஆம் இடத்தில்- பாக்கிய ஸ்தானத்தில்- ராகுவோ கேதுவோ வந்தால் தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். அதேசமயம் 6-ல் ராகுவோ கேதுவோ வந்தால்- 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம் (கடன்), சத்ரு ஸ்தானம் என்பதால் அவற்றைக் கெடுக்கும். அதாவது எதிரி, விவகாரம், வைத்தியச் செலவு, கடன் ஆகியவற்றைக் கெடுப்பார். அதனால் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும்.

எனவே ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 6, 8, 11, 12-ஆம் இடங்கள் நற்பலன்கள் தரக்கூடிய இடங்கள் என்றும், மற்ற இடங்கள் அனுகூலம் இல்லை என்றும் கூறலாம். ராகுவும் கேதுவும் தான் நிற்கும் ராசியில் இருந்து 3-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும்.

பொதுவாக எல்லா கிரகங்களும் 7-ஆம் இடத்தைப் பார்க்கும். குருவுக்கு 5, 9-ஆம் பார்வையும்; சனிக்கு 3, 10-ஆம் பார்வையும்; செவ்வாய்க்கு 4, 8-ஆம் பார்வையும் விசேஷப் பார்வை என்பது போல, ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 11-ஆம் பார்வை சிறப்புப் பார்வை!
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்ட கால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால், தேவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்தபோது மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை உண்டால் சாகாமல் சிரஞ்சீவியாக வாழலாம் என்பதைக் கண்டறிந்தனர்.

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்த்ர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி, தயிரைக் கடைவது போலக் கடைந்தால் அமிர்தம் வரும் என்று அறிந்தனர். இது மிக மிக பெரிய முயற்சி. அசாதாரண முயற்சி! தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக்கொள்ள, வாசுகியை வைத்துக் கடையவேண்டும் என்று ஏற்பாடு. அதற்கு தேவர்கள் மட்டும் போதாது என்பதால் அசுரர்களையும் துணைக்கு அழைத்தார்கள். அசுரர்களும் கிடைக்கும் அமிர்தத்தில் தமக்கும் பங்கு கொடுப்பதாக ஒப்புக்கொண்டால் பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார்கள். அதிலும் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடைந்தபோதுதான் வாசுகி என்னும் பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கியது. தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றும் பொருட்டு சர்வேஸ்வரன் தானே அந்த ஆலகால விஷத்தை உருட்டிச் சாப்பிட, அது சிவனின் வயிற்றுக்குள் இறங்கிவிடாமல் ஈஸ்வரனின் கழுத்துப்பகுதியை பார்வதி பிடித்துக்கொண்டதாகவும்; அது அவர் கழுத்தில் கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் கழுத்து நீல நிறமாகிவிடவே சிவனுக்கு நீலகண்டன் என்று ஒரு பெயர் உண்டு. நமது அனைவருடைய கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம்.

வாசுகி கக்கிய ஆலகால விஷத்தை அடுத்து பாற்கடலில் இருந்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக்குதிரையும், ஐராவதம் எனப்படும் வெள்ளை யானையும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரீகளும். தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி பகவான் தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் ஒப்பந்தபடி பங்கு வேண்டும் என்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும்  காப்பாற்றும் பொருட்டு மோகினி அவதாரமெடுத்து- அசுரர்களை மயக்கி தேவர்களை முன் வரிசையிலும் அசுரர்களைப் பின் வரிசையிலும் அமர வைத்து, எல்லாருக்கும் தன் கையால் அமிர்தத்தை பகிர்ந்தளிப்பதாகச் சமாதானப்படுத்தினார். மோகினி- தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைக் கொடுத்துவிட்டு அசுரர்களை ஏமாற்றிவிடுவார் என்று கருதிய சொர்ணபானு என்ற அசுரன், தேவர் மாதிரி உருமாறி தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான். அதை அறிந்த சூரியனும் சந்திரனும் "அவன் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன்' என்று மோகினிக்கு உணர்த்த- மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த  சட்டுவத்தால் சொர்ணபானுவின் தலையை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

யார் இந்த சொர்ணபானு? சப்தரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விபரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன்பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த நாட்டின் மன்னரான  பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை அரண்மனைக்கு  எடுத்துச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்க, அதன் விளைவாக தலை அசுரத்தலையாகவும் கீழ்ப்பாகம் பாம்பு உருவாகவும் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே அவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்.

இதுபோலவே சொர்ணபானுவின் உடல்பாகம் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞானகாரகன் ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போல் கேதுவும் தவம் இருந்து, தலையற்ற உடலில் ஐந்து தலை பாம்பாகவும் உடல் அசுர உடலாகவும் மாறி கேது பகவான் என்ற பெயர் பெற்றார். அவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

இவர்கள் இருவரும் (ராகுவும் கேதுவும்) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளை பாதிக்கின்றன. இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவக ரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனரோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனரோ அந்தந்த ராசிநாதன் அல்லது அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் தரக்கூடியவர்களாகிறார்கள். உதாரணமாக ராகு, மீனத்தில் இருந்தால் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்தோடு சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன்களையே வழங்கும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. அனுபவ ரீதியாக இதை உண்மையென்று ஏற்றுக்கொள்ளலாம்.

 
மற்ற கிரகங்கள் எல்லாம் மேஷம்- ரிஷபம்- மிதுனம் என்று வலமாகச் சுற்றும். ஆனால் ராகுவும் கேதுவும் மேஷம்- மீனம்- கும்பம் என்று இடமாக தலைகீழாகச் சுற்றும். அதனால் அவர்கள் பார்க்கும் இடமும் எதிர்மறையாகத்தான் அமையும். அதாவது ராகு 3-ஆம் பார்வையாக சிம்மத்தையும், 7-ஆம் பார்வையாக மேஷத்தையும், 11-ஆம் பார்வையாக தனுசுவையும் பார்க்கும். அதேபோல கேது 3-ஆம் பார்வையாக கும்பத்தையும், 7-ஆம் பார்வையாக துலாத்தையும், 11-ஆம் பார்வையாக மிதுனத்தையும் பார்க்கும்.


ஸ்தோத்திரங்கள்

ராகு ஸ்தோத்திரம்
அர்த்த காயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணயாம் யஹம்.

ராகு காயத்ரி
ஓம் நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.
ராகு துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
கேது ஸ்தோத்திரம்
பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்.
கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.
கேது துதி

பொன்னையன் வரத்திற் கொண்டோன் புலவர் தம்பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற 
பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற்சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

 




Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில