Showing posts with label உத்திரம். Show all posts
Showing posts with label உத்திரம். Show all posts

Wednesday, November 28, 2012

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)




சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த ராகு இப்போது மூன்றாம் இடம் துலா ராயியிலும்; 10-ல் இருந்த கேது இப்போது 9-ஆம் இடம் மேஷ ராசியிலும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள்- கேந்திர ஸ்தானங்கள் நல்ல இடங்கள்தான். இப்போது மாறியிருக்கும் இடங்களும் நல்ல இடங்கள்தான். அதிலும் கேதுவைவிட ராகு மாறியிருக்கும் இடம் 3-ஆம் இடம் சூப்பரோ சூப்பரான இடம். 3, 6, 11-ஆம் இடங்கள்தான் ராகு-கேது-சனி ஆகியோருக்கு யோகமான இடங்கள். அதேபோல கேதுவும் திரிகோண ஸ்தானத்தில் மாறியிருக்கிறார். "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே தருவார்' என்பது சந்திர காவிய விதி! மேலும் ராகுவும் கேதுவும் தலையும் வாலும் ஆகும். இவர்களில் யாராவது ஒருவர் நல்ல இடத்தில் இருந்து மற்றவர் பார்த்தால் அந்த கிரகத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும்!

"மூன்று ஆறு பதினொன்றில் ராகுகேது முகம் மலர்ந்து இருக்குமானால் ஆன்றோர்கள் சகாயம் உண்டாம்; அதிகார உத்தியோகம் உண்டாம்; சான்றோரும் சிநேகமாவர் சகல சம்பத்து செல்வம் தோன்றியே மனமகிழ்ந்து சுகமுடன் ஜீவிப்பாரே' என்பது ஜோதிடப் பாடல்.

இதன்படி ராகு மூன்றில் அமர்ந்து உங்களுக்கு நன்மை செய்வார் என்பது உண்மைதான். ஆனால் 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் கேது எப்படி நன்மை செய்வார் என்ற சந்தேகம் எழலாம். கேது ஞானகாரகன். 9-ஆம் இடம் பூர்வபுண்ய பாக்யஸ்தானம். ஆன்மிகம், தெய்வீகம், வழிபாடு, தியானம், மந்திர உபதேசம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ஞானகாரகனும் ஆன்மிககாரகனுமான கேது நிற்கும்போது தெய்வ அனுகூலம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்? குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருந்தால் என்ன குறை ஏற்படும்? குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்று பாடிய மாதிரி குறையே வராது! மேலும் அந்த 9-ஆம் இடத்தை மோட்சகாரகன் ராகு பார்க்கிறாரே- குறையில்லை எல்லாம் நிறைதான்! அதுமட்டுமல்லாமல் 3-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால் அந்த 3-ஆம் இடத்துப் பலனையும் கேது செய்வார்.

3-ஆம் இடம் சகோதர சகாய தைரிய ஸ்தானம். அதனால் உங்கள் கூடப்பிறந்தவர்களும், உற்றார்-உறவினர்களும், ரத்த பந்தச் சொத்தக்காரர்களும், உங்களை புறக்கணித்து ஒதுக்கிய நிலைமாறும். உங்களை ஓசிச்சோறு என்றும் தண்டச்சோறு என்றும் ஏசியவர்களும் பேசியவர்களும் போற்றி உபசரிக்குமளவுக்கு உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை உதயமாகும். மனித வாழ்க்கைக்கு காசும் பணமும் முக்கியம்தான். அதைவிட தன்னம்பிக்கையும் தைரியமும்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்! எப்போது 2005-ல் ஏழரைச் சனி ஆரம்பித்ததோ அப்போது முதல் கடந்த ஏழரை எட்டு வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் சாண் ஏறினால் முழம் வழுக்கிய மாதிரி, "வரவு எட்டணா செலவு பத்தணா; முடிவில் எடுக்க வேண்டும் துந்தனா' என்று பாடியமாதிரி, அடிமேல் அடிவாங்கி சூடுகண்ட பூனைபோல நம்பிக்கையும் தைரியமும் போய்விட்டது. ஆனால் இப்போது ஏழரைச் சனியும் முழுமையாக விலகிவிட்டது. அடுத்து இந்த ராகு- கேது பெயர்ச்சியும் உங்களுக்கு முழு அனுகூலமாக, ஆதரவாகச் செயல் படப்போவதால், மீண்டும் தெம்பும் திடமும் தைரியமும் வந்துவிடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யுமளவு வருமானப் பெருக்கமும் வந்துவிடும்.

துலா ராசியில் நிற்கும் ராகு 3-ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியான சிம்மத்தையே பார்க்கிறார். அடுத்து 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அடுத்து 11-ஆம் பார்வையாக சிம்ம ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் உங்கள் ஆற்றலும், திறமையும் அற்புதமாகச் செயல்படும். செயல்பாடுகள் சிறப்பாக அமையும். அரசியலில் செல்வாக்கோடு கொடிகட்டி ஆட்சி செய்வீர்கள். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்கள் நடந்துபோன பாதையில் நடக்கமாட்டார்கள். "என் வழி-தனிவழி' என்று தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில்தான் நடப்பார்கள். உங்கள் வழி ஆரம்பத்தில் மற்றவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் அடுத்தடுத்து உங்களைப் பின்பற்றி மற்றவர்களும் தொடர்ந்து வருவார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் நீங்கள் தலைவராகவே இருக்க ஆசைப்படுவீர்கள். உங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத கட்டங்களில் நைசாக நழுவி விடுவீர்கள். உங்கள் விருப்பப்படியே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு தலைமை பீடத்தையும் அந்தஸ்தையும் தனி செல்வாக்கையும் ஏற்படுத்தும்.

"எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நீங்கள் எண்ணியதை அடைவீர்கள். அந்த எண்ணம் ஈடேற நீங்கள் வைராக்யமாகவும் நம்பிக்கையாகவும் இருந்ததற்குக் கிடைக்கும் பரிசு என்று ஆறுதல் அடையலாம்; பெருமைப் படலாம். உங்களுக்கு யோகம் வரும்போது உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் விலகி வழிவிடுவார்கள். பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்துக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் பிரபலமடைந்தார். கண்ணதாசனுக்குப் பிறகு வாலியும் வைரமுத்துவும் பிரபலமாக இருக்கிறார்கள். அரசியல், ஆன்மிகம், கலை எல்லாத்துறையிலும் பிரபலமானவர்களுக்கும் திறமையாளர்களுக்கும் பிறகு, புதியவர்கள் வருகையும் பிரபலமும் அடையும் நிலையும் உண்டாகும். இதுதான் காலத்தின் கணக்கு!

ஊழ்வினைப்பயனால் சிலபேருக்கு அதிர்ஷ்டம் வந்து அரவணைத்தாலும், ஜாதக திசாபுக்தி பாதகமாக இருந்தால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாதபடி ஏமாற்றமாகி விடும்; இழப்பாகி விடும். அதற்கு ஒரு உதாரணம்- திருச்சி திருவானைக்காவல் கோவிலில் ஒருவர் அகிலாண்டேஸ்வரியை நினைத்து  ஆண்டுக்கணக்கில் வாக்கு சித்தியாக வேண்டுமென்று தவம் இருந்தார். கோவில் வாசலில் படுத்து உறங்குவார். ஒரு நாள் அன்னை அகிலாண்டேஸ்வரி தாம்பூலம் தரித்து சலங்கை ஒலிக்க நடந்துவந்து அவரை எழுப்பி "வாயைத் திற' என்று சொல்ல, அவர் தூக்கக் கலக்கத்தில் "சீ போ' என்று விரட்டிவிட்டார். அவருக்கு பக்கத்தில் கோவில் மடப்பள்ளிப் பரிசாரகர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அம்பாள் அவரை எழுப்பி, "வாயைத் திற' என்றதும், அவர் கோவிலில் வேலை செய்யும் வேலைக்காரிதான் தன்னை வந்து எழுப்புவதாக நினைத்து வாயைத் திறக்க- அம்பாள் அவர் வாயில் தாம்பூலத்தைத் துப்பிவிட்டாள். அவ்வளவுதான். அவருக்கு எல்லா ஞானமும் புலமையும் கலையும் கைவரப்பெற்றது. அவர்தான் கவி காளமேகப்புலவர். "வசைபாடக் காளமேகம்' என்றே அவருக்குப் பட்டம். இப்படி பலர் யோகத்தை அடைந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி விதிசெய்யும். எடுத்து வைத்தாலும் கொடுத்துவைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இன்றும் சிலர் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு குறுக்குவழியிலும் சட்டவிரோதமாகவும்  அரசை ஏமாற்றியும் சம்பாதிப்பார்கள். ஆனால் நல்லநேரம் இருக்கும் வரை அல்லது அதிகார பதவி இருக்கும்வரை அல்லது ஆளும் கட்சி ஆதரவு இருக்கும்வரை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் காலம் ஆகும். கெட்ட நேரம் வந்தாலும் ஆட்சி மாறினாலும் ஆதரவான அதிகாரிகள் மாறினாலும் ரெய்டு வரும். சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வரும். சொத்துக்களுக்கு சீல் வைக்கப்படும். சிறையில் வாடவேண்டிவரும். பத்திரிகைகளில் பத்தி பத்தியாக செய்தி வரும்; இதெல்லாம் தேவையா? தானும் தன் குடும்பமும், வாரிசும் வாரிசு குடும்பமும் கஷ்டப்படாமல் சம்பாதித்தால் போதாதா! பத்து தலைமுறைக்கு சேர்த்துவைக்கவேண்டும் என்று நினைத்தால் ஆகுமா? அல்லது நிலைக்குமா? மடியில் கனமிருந்தால் வழியில் பயப்படத்தான் வேண்டும். பட்டுக்கோட்டையார் எழுதியமாதிரி தேவைக்குமேல் சேர்ப்பவனும் திருடன்தான்!

ஒரு நேர்மையான இளந்துறவி; பிரம்மச்சாரி! அவரை ஒரு பணக்காரர் தனது தகப்பனார் சிரார்த்தத்துக்கு விருந்துக்கு அழைத்தார். அவரும் தட்ட முடியாமல் போனார். அவர் பங்களாவில் எல்லாம் தங்கமயமாக ஜொலித்தது. சாப்பிடும் தட்டு, டைனிங் டேபிள், டம்ளர், உணவுப் பாத்திரங்கள், உட்காரும் ஆசனம் எல்லாம் தங்கம். கைகழுவும் சொம்பும் தங்கம். துறவி கை கழுவிவிட்டு ஏதோ ஒரு கவனத்தில் அந்த தங்க சொம்பை தன் ஜோல்னா பையில் போட்டுக்கொண்டு வந்துவிட்டார். உண்ட மயக்கம் - ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டார். தூங்கி எழுந்தபோது பையைப் பார்த்தார். தங்கச் சொம்பை பார்த்து பதறிப்போய், தனவந்தரிடம் சென்று. ""தவறு நடந்துவிட்டது; மன்னித்துக்கொள் ளுங்கள்'' என்று தங்கச் சொம்பைத் திருப்பிக்கொடுத்தார். தனவந்தரோ சற்று சாதாரணமாக, ""பரவாயில்லை சாமி! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த தங்கப் பொருட்கள் எல்லாம் பல இடங்களில் திருடிச் சம்பாதித்ததுதான். எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை'' என்றாராம். அதாவது உணவு அருந்துவதும் நல்லோரிடம்தான் சாப்பிட வேண்டும். தனவந்தர் போட்ட சாப்பாடு துறவியின் வயிற்றுக்குள் இருந்தவரை அவர் செய்த தவறு தெரியவில்லை. அந்த உணவு ஜீரணமானதும்தான் தவறு செய்துவிட்டதாக வருந்தினார். இப்படி அநியாயமாகச் சொத்து சேர்த்து தானம் அளித்தாலும் கோவிலுக்கு செய்தாலும் அது புண்ணியமாகாது. பாவம் பாவம்தான். கொள்ளையடித்து கோவில் கட்டினார் திருமங்கை ஆழ்வார். ஆனால் அவரை திருமாலே வந்து காலில் இருக்கும் மெட்டியைக் கழற்றச் சொல்லி திருவடி தீட்சை கொடுத்தார். அரசு கஜானா பணத்தைக்கொண்டு கோவில் கட்டினார் மாணிக்கவாசகர். அதற்காக சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக, வாரிசுகளுக்காக தவறு செய்யவில்லை அதனால் ஆண்டவர் மன்னிப்பு கிடைத்தது. ஆனால் இன்று உள்ளவர்கள் சொந்தக் குடும்பத்துக்கும்; பெரிய வீடு, சின்னவீடு, அவர்கள் வாரிசுகளுக்கும் என ஊழல் புரிவதால் ஆண்டவன் ஏட்டில் அவர்களுக்கு "பிளாக் ரிப்போர்ட்' கிடைக்கிறது. உப்புத்தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஆக தீதும் நன்றும் பிறர் தர வாரா!

துலா ராசியில் நிற்கும் ராகு சிம்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும் (பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்) பார்க்கும் பலனுக்குத்தான் மேற்கண்ட விளக்கம். 5-ஆம் இடத்தைப் பார்ப்பதன் பலனாக வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். வாரிசு இருப்பவர்களுக்கு சந்ததி விருத்தியுண்டாகும். அதாவது வாரிசுகளுக்கு படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திரபாக்கியம் போன்ற நன்மைகள் நடக்கும்.

5-ல் ராகு இருந்தாலும் பார்த்தாலும் புத்திர தோஷம் என்பார்கள். அனுபவ ரீதியாக புத்திரஸ்தானாதிபதியும் புத்திரகாரகனும் கெட்டுப்போய் இருந்தால்தான் அந்த விதி உண்மையாகிறது! அதாவது பாவம்-பாவ அதிபதி- பாவகாரகன் மூன்றும் கெட்டுப்போய் லக்னாதிபதியும் கெட்டுப்போனால்தான் அந்த பாவம் பலவீனம் அடையும். 5-ல் ராகு இருக்கும் பலருக்கு முதல் குழந்தையே ஆண் குழந்தையாகவும் அடுத்தடுத்து பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது என் அனுபவரீதியான உண்மை.

9-ல் நிற்கும் கேது சிம்ம ராசிக்கு 7-ஆம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் சகோதரர்கள், நண்பர்கள் வகையில் சகாயமும் உதவி ஒத்தாசையும் உண்டாகும். உங்களால் உடன் பிறப்புகளுக்கு நன்மை; உடன்பிறப்புக்களால் உங்களுக்கு நன்மை! ஏற்கெனவே ஏழரைச் சனியின் விளைவாக நெருங்கிப் பழகிய நண்பர்களிடையே எதிர்பாராதவிதமாக கருத்து வேறுபாடும் பிரிவும் பிளவும் ஏற்பட்டது. அதேபோல அக்காள்- தங்கை என்ற பாசத்தோடு ஒரு தட்டில் சாப்பிட்டவர்களும், "முகத்திலேயே விழிக்கக்கூடாது' என்ற கண்டிஷனோடு வெளியேற்றப்பட்டவர்களும் உண்டு. சனிப்பெயர்ச்சியா- தங்கை பெயர்ச்சியா என்று சொல்லமுடியாதபடி இடப்பெயர்ச்சி ஏற்பட்டது. இந்த ராகு- கேது பெயர்ச்சி இதற்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படுத்துவதுபோல் கேது விரும்பிய பலனைத் தருவார். இடைக்காலப்பிரிவு இணக்கமான நெருக்கமான உறவை பலப்படுத்தும்.

11-ஆம் இடத்தைப் பார்க்கும் கேது லாபகரமான தொழில் துறையில் முதலீடு செய்ய வைப்பார். ஷேர் மார்க்கெட்டில் கேபிட்டல் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதர வகையிலும் மனைவி வகையிலும் கூட்டுச்சேர்ந்து தொழில் ஆரம்பிக்கலாம். சகலபாடி அல்லது மைத்துனர்கள் வழி அதாவது மனைவி வர்க்கத்தினரோடு சேர்ந்து புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாம். பேங்க் கடன் வாங்கி ஆட்டோமொபைல், வண்டி வாகனம், ட்ராவல்ஸ் வைக்கலாம். சிலர் பூமி சம்பந்தமான ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யலாம். சிலர் போர்வெல் மிஷின் வாங்கி வாடகைக்கு விடலாம். வடநாட்டில் வறட்சிப் பகுதிகளில் தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும். திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரியையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பூஜை செய்தால் போர்வெல் மிஷின் தொழில் லாபகரமாக செயல்படும்.

ஆக, ராகு- கேது பெயர்ச்சி எல்லாவகையிலும் உங்களுக்கு யோகத்தையும் நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போவது உண்மை. உங்களின் நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றித்தரும் என்பதும் நிச்சயம். சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி விலகியதும் உங்களுக்கு "லைன் கிளீயர்-ரூட் கிளீயர்' என்று பச்சைக்கொடி காட்டுகிறது.  

மக நட்சத்திரக்காரர்களுக்கு:


மகம்- கேதுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு ஸ்தான பலன், பார்வைபலன், சேர்க்கை பலனாக முப்பலன்களையும் செய்யும். அது என்ன முப்பலன்? ஆனி மாதம் பௌர்ணமியன்று கோவில்களில் முப்பழ பூஜை நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்களா? மாம்பழம் - பலாப்பழம் - வாழைப்பழம் ஆகிய முக்கனியும் பழவர்க்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படும். காரைக்கால் அம்மையார் கணவன் வாங்கி அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டார். கணவன் வந்து ஒரு மாம்பழத்தைச் சாப்பிடும்போது, பழம் ருசியாக உள்ளது. இன்னொரு பழத்தையும் கொண்டுவா என்றார். காரைக்கால் அம்மையார் சிவனை மனமுருக வேண்டி மாம்பழம் பெற்று கணவருக்குத் தருகிறார். சிவன் தந்த பழம் அல்லவா- சுவைக்கு சொல்லவேண்டுமா? உண்மையறிந்த கணவன் அதுமுதல் காரைக்கால் அம்மையாரோடு குடும்பம் நடத்த விருப்பப்படாமல், அம்மையார் துறவியாகிறார். அதன் நினைவாகத்தான் ஆனிமாதம் சிவாலயங்களில் முப்பழ பூஜை நடக்கிறது. அதுமாதிரி ஸ்தான பலன் - பார்வை பலன் - சேர்க்கை பலன் என்று ராகு- கேதுவுக்கு முப்பலன் கணிக்கலாம். ஷட்பலன் என்பது ஆறுவகைப் பலன் இது முப்பலன்! சுயசாரப்பலன்- 9-ல் நின்று 3, 7, 11-ஆம் இடங்களைப் பார்க்கும் பலன். உச்ச சனியோடு ராகு சேர்ந்த பலன் ஆகிய காரணங்களால் உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வழிபட வேண்டும். மலையேற முடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள விநாயகரை வழிபடலாம்.

பூர  நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி எல்லாவகையிலும் அற்புதப்பலன்களைச் செய்யும். பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரனின் வீட்டில்தான் (துலாத்தில்) ராகு இருக்கிறார். அந்த வீட்டையே கேதுவும் பார்க்கிறார். சுக்கிரன் 3, 10-க்குடையவர் என்பதால் தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு, புதிய வேலைவாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் களஸ்திர காரகன் என்பதால் திருமணயோகமும் உண்டாகும். ஏழரைச் சனியில் பிரிந்த கணவன்-மனைவி இனி ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தலாம். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகலாம். மயிலாடுதுறை அருகில் பேரளத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வழிபட வேண்டும். அங்கு 12 நாகர் சிலை உண்டு. அதற்குப் பாலாபிஷேகம் செய்யலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:


உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியனின் உச்சவீடு மேஷம்; நீசவீடு துலாம். மேஷத்தில் கேதுவும், துலாத்தில் ராகுவும் இருக்கிறார்கள். இருவருக்கும் சூரியன் பகை என்றாலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு- கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்; கெடுதல் செய்யாது. ஏனென்றால் ராகு நின்ற இடத்துக்கு சூரியன் 11க்கு உடையவர். கேது நின்ற இடத்துக்கு சூரியன் 5-க்குடையவர்.  தஞ்சாவூர் அருகில் ஒரத்தநாடு வழி பரிதியப்பர் கோவில் என்று சிற்றூர் உள்ளது. அங்கு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உண்டு. சூரியன் அவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற திருத்தலம். அங்கு சென்று வழிபடவும்.

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)




கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த ராகு இப்போது 2-ஆம் இடத்திலும்; 9-ல் இருந்த கேது 8-ஆம் இடத்திலும் மாறியிருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் கடந்த காலத்தில் இருந்த இடங்களைவிட இப்போது மாறும் இடங்கள் அவ்வளவு சிறப்பானது என்று கூறமுடியாது.

கடந்த காலத்தில் ராகு 3-ல் இருந்த இடம் அற்புத இடம். "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற்கேறின் பாகு தேன்பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாம்; ஆகும் காரியங்களுண்டாம்; அன்ன தானங்களுண்டாம்; வாகுமறு மணமும் உண்டாம்; வரத்துமேல் வரத்துண்டாமே' என்றபடி எல்லா சௌபாக்கியங்களையும் அனுபவித்தீர்கள். ஆனால் அந்த ஆனந்த அனுபவம் அனைவருக்கும் இருந்ததா என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் கன்னி ராசிக்கு 8-ல் குரு இருந்ததும்,. ஜென்மத்தில் சனி இருந்ததுவும்தான். அவர்கள் இருவரும் இப்போதும் விலகிவிட்டார்கள். 8-ஆம் இடத்து குரு 9-ல் மாறி கன்னி ராசியைப் பார்க்கிறார். அதேபோல ஜென்மச்சனி விலகி பாதச்சனியாகி உச்சபலம் பெறுகிறார். எனவே ராகுவுக்கு இருந்த "செக்' (தடை) விலகிவிட்டது.

இப்போது ராகுவும் கேதுவும் மாறியுள்ள இடங்கள் சுமாரான இடங்கள்தான் என்றாலும் மற்ற கிரக அமைப்புகளாலும் குறிப்பாக குரு சனி- இருவரும் நிற்கும் இடத்தின் தன்மையாலும் ராகு- கேது பெயர்ச்சி உங்களைக் கெடுக்காது என்று ஆறுதல் அடையலாம். ஜோதிடத்தில் ஸ்ருதி-யுக்தி-அனுபவம் என்று மூன்று நிலை உண்டு. உதாரணமாக ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் குரு வந்தால் குருபலம் வந்துவிட்டது- வியாழ நோக்கம் வந்துவிட்டது என்பார்கள். அந்த குரு பலமும் வியாழ நோக்கமும் 10 வயதுப் பிள்ளைக்கு வந்தால் திருமணம் ஆகிவிடுமா? அதற்குரிய பருவ வயது வர வேண்டாமா? முதலில் சொன்ன குருபலம் என்பது ஸ்ருதி. வயதைப் பொறுத்தது என்பது யுக்தி. பருவவயது 20-25 வயதாகிவிட்டது என்றாலும் களஸ்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருக்கிறா இல்லையா என்பதைக் கண்டறிவது அனுபவம்!

2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம், வித்தை எனப்படும். அங்கு ராகுவும் சனியும் இருக்கிறார்கள். கன்னி ராசிக்கு சனி 5, 6க்குடையவர். சனி நின்ற துலா ராசிக்கு சனி 4, 5-க்குடைய ராஜயோகதிபதி எனவே ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு வீட்டில் நிற்கும் கிரகம் அந்த வீட்டுக்கு 5, 9 என்ற திரிகோணாதிபத்தியம் பெற்றால் அந்த வீட்டுக்கு யோகத்தைச் செய்யும். அதன்படி சனி 2-ஆம் இடத்துக்கு நன்மை தருவார். அவரோடு சேர்ந்த ராகுவும் நன்மை செய்வார். எனவே திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், குடும்பம் அமையும். படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு படிப்பு மேன்மையடையும். ஏழரைச் சனியால் படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் அல்லது படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் ஜென்மச்சனி விலகிய காரணத்தால் படிப்பை பூர்த்தி செய்யலாம். விட்ட படிப்பை மேற்கொண்டு தொடரலாம். கடந்த காலத்தில் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கும்- நிரந்தரவேலை, நிரந்தர சம்பாத்தியம் இல்லாதவர்களுக்கும் இனி நிலையான வேலை, நிலையான சம்பளம் அமையும். சனியும் ராகுவும் சுக்கிரன் வீட்டில் இருப்பதால், சுக்கிரன் ஜலகிரகம் என்பதாலும்  ஏழரைச் சனி நடப்பதாலும் சிலர் பெற்றோரை விட்டுப் பிரிந்து வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது சம்பந்தமாக சொந்த முதலீடு இல்லாதவர்கள் அதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்யலாம். சனி 6-க்குடையவர் என்பதன் பலன் அதுதான்.

ஒரு சிலர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போகலாம். அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டபடி பிறந்த ஊரைவிட்டு வேலை சம்பந்தமாக வெளியூர் வாசம் போகலாம். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் சகாயமும் உதவியும் எதிர்பார்க்கலாம். ராகு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயம், அலைச்சல், வெளியூர்ப் பயணம் ஆகிய பலன்களைச் சந்திக்கும் நிலை.

கன்னி ராசிக்கு 8-ஆம் இடம் மேஷத்தை ராகு பார்ப்பதால், சிலருக்கு கௌரவப் பிரச்சினையும் இடப்பெயர்ச்சியும் ஏற்படும். 3-ஆம் இடத்தையும் ராகு பார்ப்பதால், உடன்பிறந்தவர்கள் வகையில்- நண்பர்கள் வகையில் சில பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சிலர் சந்திக்க நேரும். அவர்களுக்காக செலவுகளையும் விரயங்களையும் சந்திக்கலாம்.

ராகுவும் கேதுவும் கன்னி ராசிக்கு 9-ஆம் இடத்துக்கு 6-ல், 12-ல் இருப்பதால், பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் விரயச் செலவுகளையும் சந்திக்கலாம் என்றாலும் 9-ல் குரு இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி சங்கடங்களும் பிரச்சினைகளும் நிவர்த்தியாகும்.

9-ஆம் இடத்துக்கு 6, 12-ல் இருக்கும் ராகு- கேது, ஜாதக தசாபுக்தி சரியாக இல்லாவிட்டால் சொத்துப் பிரச்சினைகளும் பிரிவு பிளவையும் ஏற்படுத்தலாம். தகப்பனாரும் இரண்டு மகன்களும் சேர்ந்து ஒரு தொழிலை சிறிதாக ஆரம்பித்தார்கள். மூன்றுபேருடைய ஒத்துழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றமடைந்து பெரிய அளவில் வளர்ந்து விட்டார்கள். வீடு, வாகனம் போன்ற வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. வாடகைக்கு இருந்த தொழில் ஸ்தானத்தையும் விலைக்கு வாங்கி விட்டார்கள். திடீரென்று தகப்பனார் காலமாகிவிட்டார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து தொழில் நடத்தலாம் என்று அண்ணன் நினைத்தார். ஆனால் தம்பியோ உடனே பாகத்தைப் பிரிக்கவேண்டும் என்றார். அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்த பிறகு- தலை திவசத்துக்குப்பிறகு பாகம் பிரிக்கலாம் என்று அண்ணன் சொன்னார். ஆனால் தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. உடனே பிரித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினார். முடிவு- கடை இடத்தை அண்ணனும், விலாசத்தை (டிரேட் மார்க்கை) தம்பியும் பிரித்துக் கொண்டார்கள். முடிவில் அண்ணனிடம் விசுவாசமான ஊழியர்களும், தம்பியிடம் ஏமாற்றும் ஊழியர்களும் அமைந்துவிட்டார்கள். அண்ணன் கோவில், தெய்வம், பூஜை என்றும்; தொழில்துறையில் குறைந்த லாபம் இருந்தால்போதும் நாணயம் முக்கியம் என்றும் தொழில் செய்தார். தம்பி- அதிக லாபம் பார்க்க வேண்டும் என்று தொழில்துறையில் கலப்படம் செய்து பெயர் விலாசம் கெட்டுப்போய் விட்டது.

தொழிலாகட்டும் அரசியலாகட்டும்- கொள்கை கோட்பாடுடன் செயல்பட்டால் நிலைக்கலாம்; நீடிக்கலாம். சந்தர்ப்பவாதமாக நிலையற்ற கூட்டணியாக இருந்தால் வீழ்ச்சிதான். பூர்வீக சொத்து, கட்டட சம்பந்தமான விவகாரங்களும் ஏற்படலாம். பதட்டப்படாமலும் ஆத்திரப்படாமலும் அடிக்கடி மோதல்களில் இறங்காமலும் பொறுமையைக் கடைப்பிடித்து செயல்பட்டால் சாதகமான பலனைச் சந்திக்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறையும் முப்பது வருடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். எவ்வளவு மோசமான ஜாதகமாக இருந்தாலும் முப்பது வருடங்களுக்கு மேல் அந்தக் கஷ்டம் நீடிக்காது. முப்பது வருடங்களுக்கு மேல் சேர்ந்தாற்போல துன்பப்பட்டவரும் இல்லை; இன்பமாகவே இருந்தவரும் இல்லை. இது என்ன கணக்கு? குரு 12 வருடங்களுக்கு ஒருமுறை இருந்த ராசிக்கே வருவார். ராகு-கேது 18 வருடங்களுக்கு ஒரு முறை இருந்த இடத்துக்கே திரும்ப வருவார்கள். சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை பழைய இடத்துக்கே வருவார்.

அதுபோல ஸ்த்ரீ சாபத்தாலோ அல்லது குடும்ப தோஷத்தாலோ அல்லது தெய்வ குற்றத்தாலோ இப்படி ஏதாவது ஒரு காரணத்தால்  சாண் ஏற முழம் சறுக்க என்று வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு 18 வருடத்துக்குப் பிறகு ஒரு விமோ சனம் பிறக்கும். ருதுவாகி 18 ஆண்டுகளாக திருமணம் ஆகாத பெண் களுக்கும், 36 வயதுவரை (இரண்டு 18 வருடம்) திருமணம் ஆகாத ஆண் களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி நல்லது செய்யும். கால சர்ப்பதோஷத்தால் நல்லது நடக்காத ஜாதகர்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி ஏதோ ஒருவகையில் யோகத்தைச் செய்யும். காலசர்ப்ப தோஷத்தின் பாதிப்பும் 36 வருடம்தான். அதன்பிறகு தோஷம் நிவர்த்தி யாகும். காலசர்ப்பதோஷம், காலசர்ப்ப யோகமாக மாறும். இது அனுபவ உண்மை!

8-ல் உள்ள கேது சிலசமயம் வீண் பயம், வீண் கற்பனையை உருவாக்கும்., சிலருக்கு கௌரவப் போராட்டம், கௌரவப் பிரச்சினையை உருவாக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சியை உருவாக்கும்.

மொத்தத்தில் ராகு-கேதுப் பெயர்ச்சி கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு குணமாக்கும் என்றும்; நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் தரும் என்றும் எதிர்பார்க்கலாம். "விட்டதெல்லாம் விரயம் தொட்டதெல்லாம் துயரம்' என்ற நிலை மாறிவிடும். "சட்டி சுட்டதடா கை விட்டதடா' என்று கஷ்டங்களையும் கவலைகளையும் விட்டு விலகி விடலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:


உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் ராகுவுக்கும் கேதுவுக்கும் பகை கிரகம். என்றாலும் சூரியன் வீடான சிம்மத்தை ராகு பார்க்கிறார். சூரியனின் உச்ச வீடான மேஷத்தில் கேதுவும், சூரியனின் நீச வீடான துலாத்தில் ராகுவும் நிற்பதால், தற்காலிக நட்பாக எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சூரியன் 12-க்குடையவர் என்பதால் சுபச்செலவுகள், சுபமங்கள விரயங்கள் உண்டாகும். கெடுதலிலும் நல்லது என்பதுபோல நல்லது நடக்கும். தஞ்சாவூர் அருகில் ஒரத்தநாடு வழி-பரிதியப்பர் கோவில் என்ற ஊரில் பாஸ்கரேஸ்வர சுவாமி திருக்கோயில் இருக்கிறது. அந்தக் கோவில் மூலவரை சூரியன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. அங்கு சென்று வழிபடலாம்.

அஸ்த  நட்சத்திரக்காரர்களுக்கு:

கன்னிராசிக்கு சந்திரன் 11-க்குடைய லாபாதிபதியாவார். அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் கன்னிக்கு லாபாதிபதியாவார். எனவே ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு வெற்றியையும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் தரும். சந்திரன் வீடான கடகம்- ராகுவுக்கு 10-ஆம் இடம்; கேதுவுக்கு 4-ஆம் இடம். எனவே உங்கள் ஆரோக்கியம் பலமடையும். பூமி, வீடு, வாகனம், தாய் சம்பந்தப்பட்ட நன்மைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றம், தொழிலில் புது முயற்சி, பதவியில் நிறைவு ஆகிய பலன்கள் உண்டாகும். சிவகங்கை பஸ் ஸ்டாண்டு அருகில் சசிவர்னேஸ்வரர் கோவில் இருக்கிறது. சுவாமி சசிவர்னேஸ்வரர். அம்பாள் பெரிய நாயகி. சந்திரன் சாபவிமோசனம் பெற்ற திருத்தலம். அங்கு சென்று திங்கள் கிழமை வழிபடவும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீடான மேஷத்தில்தான் கேது இருக்கிறார். அதற்கு ஏழில் ராகு இருக்கிறார். செவ்வாய் கன்னிராசிக்கு 3, 8-க்குடையவர். கேதுவுக்கு 1, 8க்குடையவர்; ராகுவிற்கு 2, 7-க்குடையவர், எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்லது கெட்டது இரண்டையும் கலந்து பலன் செய்யும்! ஆரம்பத்தில் கெடுபலனாக இருந்தால் பிற்பகுதி சுபபலனாகவும், ஆரம்பத்தில் நற்பலனாக நடந்தால் பிற்பகுதியில் துர்ப்பலனாகவும் அமையும். என்றாலும் கெடுதலும் நல்லதாக முடியும் என்பதால் கவலைப்பட வேண்டாம். பழனி முருகனையும் சென்னை வடபழனியாண்டவரையும் வழிபடவேண்டும். செவ்வாய்க்கிழமை உகந்த நாள்!

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...