Wednesday, November 28, 2012

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)



மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)




மீன ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம்  இடத்திலும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்திலும்  மாறியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். அதனால் ஒரு சில தடை தாமதமான பலன்களையும் காரியத்தடைகளையும் தவிர, பெரிய பாதிப்புகளைச் சந்திக்கவில்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில மீன ராசிக்காரர்களுக்கு சில நல்ல காரியங்களையும் கடந்த கால ராகுவும் கேதுவும் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஒரு சிலருக்கு சொந்த இடம், வீடு, வாசல், மனை, புதிய வாகன யோகத்தையும் தந்துள்ளது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாகத் தடைப்பட்ட பிள்ளையின் கல்யாணமும் நடந்துள்ளது. நல்ல மருமகள், நல்ல மருமகன் ஆகிய பலனையும் சந்தித்துள்ளனர். ராகு-கேது இவற்றுக்கு துணை செய்வதுபோலவும் ஆதரவு காட்டுவது போலவும் 2-ஆம் இடத்து குருவும், 7-ஆம் இடத்துச் சனியும் நல்ல இடத்தில் இருந்து நல்ல இடங்களைப் பார்த்தார்கள்.

ஏற்கெனவே கேது இருந்த மூன்றாமிடம் அற்புதமான இடம்- யோகமான இடம். அதேபோல் 9-ல் இருந்த ராகுவும் பாக்ய ஸ்தானத்தில் நின்றவர், மீன ராசிக்கு 7-ஆம் இடம், 3-ஆம் இடம், 11-ஆம் இடங்களையும் பார்த்தார். திருமணம், செய்தொழில், உபதொழில், மனைவியின் பேரில் சொத்து சுகம், ஃபிக்ஸட் டிபாசிட், சேமிப்பு, தங்க ஆபரண அணிகலன் சேர்க்கை, தங்க சேமிப்புத் திட்டம், மனைவி வழி- கணவன் வழி உறவினர்களுடன் நல்லுறவு, பழைய பகைகளை மறந்து நட்பு பாராட்டுதல் போன்ற பலன்களை அனுபவித்தார்கள். ஒரு சிலர் தெய்வ ஸ்தல யாத்திரை, புனிதப் பயணம் மேற்கொண்டனர். சிலரின் மனைவிகளுக்கு கிட்னி, இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு, சென்னை, வேலூர் போன்ற இடங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சைசெய்து அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்கள். இனி எந்த பயமும் இல்லை என்ற ஆறுதலான செய்தியைக் கேட்டு நிம்மதியடைந்தார்கள். காசு பணம் செலவு ஆகிவிட்டாலும் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாக ஒரு திருப்தி! அதையும் 7-ஆம் இடத்தைப் பார்த்த ராகுவும் ரிஷப குருவும் தந்தார்கள்.

3-ஆம் இடத்தைப் பார்த்த ராகு சகோதர ஒற்றுமை, நண்பர்கள் வகை உதவி, உடன் பிறப்புகளால் அல்லது அவர்களது வாரிசுகளால் நன்மை ஆகிய பலனையும் செய்தார். ஒரு சிலரின் அனுபவத்தில், போதைக்கு அடிமையாகி அண்ணன்-தம்பி உறவு எல்லாம் வேஷம் மோசம் என்றும்; வாய்க்கு வந்தபடி வசைபாடி வெறுப்பேற்றிய நிலையில், தான்செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதுண்டு. பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக மாறியதும் உண்டு. உடன்பிறப்புகள் ஒத்துப்போனாலும் அவர்களுக்கு வாய்த்தவர்கள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல பிரிந்த குடும்பத்தைச் சேரவிடாமல் கோள் மூட்டி குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கியதும் உண்டு. அது கேதுவின் வேலை. அந்தக் கேது 3-ல் இருந்ததால் உடன்பிறப்புகள் வகையில் விளையாடியது. ஒரு சிலருக்கு நல்ல மருமகன், நல்ல மருமகள் என்று சந்தோஷப்பட்டாலும், அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல், சம்பந்தக்காரர்களின் சதிகளுக்கு ஆளாகி சஞ்சலத்தை உண்டு பண்ணிய அனுபவத்தையும் தந்தது, அதுவும் கேதுவின் வேலை.

7-ஆம் இடத்தில் இருந்த சனியும், 7-ஐப் பார்த்த ராகுவும், 7க்கு 8-ல் மேஷத்தில் இருந்த குரு பலனாக- ஒருசிலருக்கு அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பேசிமுடித்த திருமணமும் நிச்சயதார்த்தமும் நின்று போனது. ஆக, இந்த நவகிரகங்கள் இருக்கிறார்களே, அவர்கள் ஒரே சமயம் நல்லதையும் செய்கிறார்கள்; கெட்டதையும் செய்கிறார்கள். ஒரே தெருவில் மகிழ்ச்சியான திருமணத்தையும் நடத்துகிறார்கள். துக்கமான அழுகை நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள்.

அவிநாசியில் சுந்தரர் வந்துகொண்டிருந்தபோது, அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில் மங்கள வாத்தியம் முழங்க பூணூல் அணியும் விழா நடக்கிறது. அதற்கு அடுத்த வீட்டில் பெற்றோரின் அழுகைச் சத்தமும் கேட்கிறது. சுந்தரர் விசாரிக்கிறார். பூணூல் விழா நடக்கும் பையனும் தங்கள் ஒரே பையனும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் குளிக்கப்போன சமயம், தமது பையனை முதலை விழுங்கி விட்டதாகவும்; அவன் உயிரோடு இருந்திருந்தால் இப்போது அவனுக்கும் பூணூல் விழா நடந்திருக்கும் என்றும் கதறுகிறார்கள். உடனே சுந்தரர் அவிநாசியப்பனை வேண்டி ஆற்றுக்குப் போய் அற்புதத் திருமுறைப் பதிகம் பாடுகிறார். முதலை உண்ட பாலகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே வளர்ச்சியுடன் மீண்டு வருகிறான். இப்போது சுந்தரர் மாதிரியும் ஞானசம்பந்தர் மாதிரியும் அப்பர் மாதிரியும் ஆற்றல் பெற்ற அடியார்கள் இல்லையே! என்ன செய்வது? அப்படிப்பட்டவர்கள் இருந்தால் கோவில் உண்டியல் திருடர்கள் அப்போதே தண்டனைக்காளாவர்களே! காவியுடையில் காமக்களியாட்டம் போடும் ஆதீனங்களுக்கு கண்ணவிந்து போயிருக்குமே! அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் அநியாயக்காரர்களுக்கு வாதம், வலிப்பு நோய் வந்திருக்குமே!

அப்பர் சுவாமிகளும், வள்ளல் பெருமானும், "நாத்திகம் பேசும் நாத்தழும்பு ஏறியவர்கள்' என்றும், "நாத்திகம் பேசும் நாக்கு முடை நாக்கு' என்றும் பாடுகிறார்கள்! ஆனால் ஒன்று-என்றுமே பொய்யும் புரட்டும் நிலைத்து நிற்காது; நீடித்து ஆட்சி செய்யாது. சத்தியமே ஜெயிக்கும்; வாய்மையே வெல்லும்.

அது சரிதான்! ஆனால் குருக்களைக் கடித்த நாய் நரகத்துக்குப் போகிறதா சொர்க்கத்துக்குப் போகிறதா என்ற ஆராய்ச்சி பிறகு. இப்போது குருக்கள் தொப்புளைச் சுற்றி பத்து ஊசி போடும் வலி குருக்களுக்குத்தானே தெரியும் என்கிறீர்களா! அங்கேதான் கிரகங்களின் தசாபுக்தி வேலை செய்கிறது.

8-ஆம் இடத்துக்கு வந்திருக்கும். ராகுவும், அவரோடு சேர்ந்துள்ள அட்டமத்துச் சனியும், 2-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் கேதுவும் மீன ராசிக்காரர்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதைக் கவனிப்போம்.

8-ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, பீடை, கௌரவ பங்கம், விசனம், கவலை, இழப்பு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இவற்றில் சுபகிரகம் வந்தால் அவற்றை வளர்ப்பார். பாபகிரகம் வந்தால் அவற்றைக் கெடுப்பார். இயற்கையில் பாபகிரகம் ஆகிய ராகு அந்த பாப ஸ்தானத்தில் வருவதால் அந்த பாபத்தன்மைகளை விரட்டியடிப்பார் அல்லது அழித்து விடுவார் என்று சொல்லலாம். கெட்ட இடத்தில் வந்தி ருக்கும் கெட்ட கிரகம் கெட்ட பலன்களைக் கெடுப்பதால் நன்மை உண்டாகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் நன்மை! டபுள் மைனஸ்= பிளஸ்.. குளத்திலே உள்ள மீன்கள் தங்கள் உணவுக்காக அழுக்குகளைச் சாப்பிடுவதால் குளம் சுத்தப்படுவது மாதிரி! 

அதனால் 8-ல் இருக்கும் ராகு நிச்சயம் உங்கள் பெருமை, திறமை, செயல்பாடுகளைக் கெடுக்கமாட்டார் என்பதை நம்பலாம். அதனால் உங்களுக்கு பிணி, பீடைகள் ஏற்பட்டாலும் நிவர்த்தியாகும். ஏமாற்றம், இழப்பு ஏற்பட்டாலும் ஈடுசெய்யப்படும். கௌரவ பங்கத்தை உருவாக்கும் விமர்சனங்கள் பேசப்பட்டாலும், களங்கம் கற்பிக்கப்பட்டாலும், குற்றமற்றவர் என்றும் நிரபராதி என்றும் நிரூபிக்கப்படும். கவலையும் விசனமும் அகற்றப்படும்.

அதேசமயம் அவருடன் சேர்ந்துள்ள அட்டமச்சனி என்ன செய்வார்? அவரும் ஒரு பாபகிரகம்தானே- கெட்ட கிரகம்தானே? அவர் 8-ல் இருந்தால் அந்த எட்டாமிடத்துக் கெட்ட பலனைக் கெடுத்து நல்ல பலனாக மாற்றியமைக்க மாட்டாரா? ராகுவும் கேதுவும் எப்போதும் கெட்ட கிரகங்கள்தான். ஆனால் சனி அப்படிப்பட்டவரல்ல. ஒருசில ராசிக்கு சனி நல்லவர்; ஒரு சில ராசிக்கு கெட்டவர். ரிஷப ராசி, துலா ராசிக்கு அவர் ராஜயோகாதிபதி. மிதுன ராசி, சிம்ம ராசிக்கு நல்லவரும் ஆவார்; கெட்டவரும் ஆவார். இப்படி சந்தர்ப்பம்போல சனி நல்ல ஆதிபத்தியமும் கெட்ட ஆதிபத்தியமும் பெறுவதால் முழுக்க முழுக்க நல்லவர் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது; முழுக்க முழுக்க கெட்டவர் என்றும் ஒதுக்கமுடியாது. அதனால்தான் ஏழரைச் சனியும் அட்டமச் சனியும் சிலருக்கு நல்லதும் செய்கிறது; சிலருக்கு கெட்டதும் செய்கிறது. இது அனுபவ ரீதியான உண்மை.

அந்த அடிப்படையில் மீன ராசிக்கு 8-ல் வந்துள்ள அட்டமச்சனி நல்லது செய்யுமா? கெட்டது செய்யுமா? மீன ராசிக்கு 12-க்குடையவர் என்பதால் அவர் 8-ல் மறைவது நல்லது. 11-க்குடையவர் என்பதால் அவர் 8-ல் மறைவது கெட்டது. இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. 12-க்குடையவர் 12-ஆம் இடத்துக்கு (கும்பத்துக்கு) திரிகோணத்தில் இருக்கிறார். எனவே 12-ஆம் இடத்தை உருவாக்கி ஜென்ம ராசிக்கு (உங்களுக்கு) கெடுதல் பண்ணுவார். 12 என்பது விரயம், இடப்பெயர்ச்சி, செலவு, அயன சயன போகம் ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது இடமாற்றம், குடியிருப்பு மாற்றம். 10-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் தொழில், உத்தியோக வகையில் இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வேலை, குடியிருப்பு சம்பந்தமாக இடம் மாறுவதால், அவர்கள் பொருட்டு நீங்களும் இடம் மாறலாம். சில பிள்ளைகள் வெளிநாட்டில் போயிருப்பார்கள். அவர்கள் விருப்பப்படியோ அல்லது அவர்களுக்கு பேறுகாலம் அல்லது வைத்தியம் பார்க்க உதவியாகவோ பெற்றோர்களும் சிறிது காலம் அங்கு போய் தங்கியிருக்கலாம். அதுவும் இடப்பெயர்ச்சிதான்.

சிலர் உள்ளூரில் வீடு வாங்கியிருந்தாலும் வெளியூரில் குறைந்த எஸ்டிமேட்டிலும் வீடு வாங்கலாம். அதுவும் கடன்தான். ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மாதத் தவணைக்கடனை அடைக்கலாம். இன்னும் சிலர் புதுக்கடன் வாங்கி மாடியில் வீடுகட்டி வாடகைக்கு விடலாம். அல்லது பெரியவர்களுக்கு சொந்த வீடு இருந்தாலும் மகனுக்கோ மகளுக்கோ புதுவீடு, புது இடம் வாங்கலாம். இவையெல்லாம் நல்ல செலவு என்றாலும், மாதாமாதம் தவணை கட்ட வேண்டும், வட்டி கட்டவேண்டும் என்பது "ரிஸ்க்'கான சமாச்சாரம்தானே. கவலைதரும் விஷயம்தானே! தவறாமல் செலுத்தி நாணயத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதும் கவலைதரும் விஷயம்தானே!

2-ஆம் இடத்தில் வந்திருக்கும் கேதுவும் அவரைப் பார்க்கும் சனியும் ராகுவும் குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்கள். விரயாதிபதி சனி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அது சுபச்செலவுதானே - சுபவிரயம்தானே! 2-ஆம் இடம் வாக்கு, தனம், வித்தை, கல்வி, குடும்பம், நேத்ரம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். சிலர் படிப்புக்காக செலவழிக்கலாம்.. சிலருக்கு கண் ஆபரேஷன் சம்பந்தமான செலவு வரலாம். 2-ல் கேது நிற்பதால் சிலர் ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம், அருள்வாக்கு சொல்லலாம். அதன் மூலமாக பொருளும் புகழும் பேரும் பெருமையும் அடையலாம்.

4-ஆம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் பார்க்கும் கேது 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால் பூமி, வீடு, இடம் சம்பந்தமான செலவுகளும் ஏற்படும். ஜாதக தசாபுக்திகள் பாதகமான இருந்தால் வாங்கிய இடத்தால் வில்லங்கம், பிரச்சினை, கட்டிய வீட்டிலும் பக்கத்து இடத்துக்காரனால் பிரச்சினை. எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் வீடு கட்டிவிட்டார்கள், கார் வாங்கிவிட்டார்கள் என அண்ணன்-தங்கை, அக்காள்- தம்பி என்று பழகியவர்களும் பொறாமைப்படுவார்கள். தினசரி வந்து காபி டீ குடித்துவிட்டு அளவளாவிவிட்டுப் போனவர்களும், ஒரு நாளைக்கு பத்து முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களும் காரணம் இல்லாமல் வாயடைத்துப்போனவர்கள் மாதிரி வரமாட்டார்கள்; பேசமாட்டார்கள். குடியிருக்கும் பூர்வீக வீட்டில் பங்கு கேட்டு பங்காளிகள் சிலர் பிரச்சினை பண்ணுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பங்காளிகள் ஒருவீட்டுக்கு இரண்டு மூன்று வீடு வசதியாக வாழ்கிறவர்களும் உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பார்கள். உங்களுக்கென்று வேறு சொந்த வீடும் இருக்காது. வேறு இடமும் வாங்கியிருக்கமாட்டீர்கள். இதுதான் அட்டமத்துச் சனியின் விளையாட்டு.

இந்த வேதனையும் சோதனையும் குரு ரிஷபத்தில் இருக்கும் வரைதான். பிறகு குரு மிதுன ராசிக்கு மாறியதும் சனியைப் பார்க்கப்போவதால், குருபார்வை கோடி நன்மை என்பது போல எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ராசிநாதன் என்ற முறையிலும் குருவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ராகு 3-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 7-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 11-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.

6-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகு நோயையும் தருவார்; கடனையும் கொடுப்பார்; சத்துரு, போட்டி பொறாமைகளையும் உருவாக்குவார். ஆனாலும் இந்த 6-ஆம் இடத்துக் கெடுதல்களையும் அவரே போக்குவார். பொதுவாக நோய் என்பது பல வகையில் ஏற்படும். கிரக ரீதியாகவோ, இயற்கை மாற்றத்தாலோ, உணவுப் பழக்க வழக்கத்தாலோ ஏற்படலாம். சில நோய் முன்ஜென்ம வினைப்பயனாலும் அல்லது செய்வினைக் கோளாறினாலும் வரலாம். சிலர் சர்ப்பத்தை அடித்துக் கொல்லுவதால் நாகதோஷம் வரலாம். பாம்புப் புற்றை இடிப்பதாலும் ஏற்படலாம். இதனால் சிலருக்கு சருமநோய், தோல்வியாதிகள் ஏற்படலாம்.

சில நோய் வைத்திய சிகிச்சையால் தீரும். சில நோய் பிரார்த்தனை பலத்தால் தீரும். சில நோய் பரிகார பூஜையால் தீரும். ஆயுள் தீர்க்கமாக இருந்தால் பரிகாரமும் பூஜையும் பிரார்த்தனையும் காப்பாற்றும். இல்லாவிட்டால் விதி ஜெயித்துவிடும்.

கல்விக்கு சரசுவதி- செல்வத்துக்கு லட்சுமி- வீரத்துக்கு பார்வதி என்பதுபோல ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி பகவான்! நோயுள்ளவர்கள் தன்வந்திரி பகவானை வழிபட்டாலும், அவர் மந்திரத்தை தினசரி எழுதினாலும் ஜபித்தாலும் நோய் குணமாகும். உலக மக்கள் அனைவரும் நோயற்று ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாலாஜாபேட்டை அருகில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் நிறுவி, ஏழு அடி உயரத்தில் தன்வந்திரி சுவாமியையும் நிறுவி, டாக்டர் ஞானகுரு முரளீதர சுவாமிகள் 365 நாளும் ஹோமம், ஜபம் ஏற்பாடு செய்து மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். சுமார் 50 கோடி மந்திரங்களை ஜாதிமதபேதமின்றி அனைத்து சமயத்தாரும் எழுதியனுப்ப, அதையே சிலையின் பீடத்தின் அடியில் மந்திரப்பிரதிஷ்டையாக அமைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல; யாருக்கு என்ன தேவையோ என்ன பிரச்சினையோ அத்தனைக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் வண்ணம்  63 சந்நிதிகளையும் உருவாக்கி ஐதீகப்படி முறைப்படி ஜபதபம், ஹோமம், பூஜைகள் நடந்து வருகிறது. மனித வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் யாவும் நீங்குமளவு எல்லா தெய்வ சந்நிதிகளும் உண்டு. வாஸ்துகுறை நிவர்த்தியாக  உலகத்திலேயே வாஸ்துவுக்கு என்று தனிச் சந்நிதி இங்குமட்டுமே இருக்கிறது. தெய்வ சந்நிதி மட்டுமல்ல; சித்தர்கள் பீடமும் அமைக்கப் பட்டுள்ளது. உலக சித்தர்களின் அருளையெல்லாம் ஒன்று திரட்டி இங்கு அருள் பாலிக்குமாறு செய்திருக்கிறார். கிரகங்களினால் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளும் இப்படி தெய்வ வழிபாட்டி னால்தான் தீரும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

பூரட்டாதி குருவின் நட்சத்திரம். குரு உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல; தொழில் ஸ்தானாதிபதி- வாழ்க்கை ஸ்தானாதிபதி 10-க்குடையவர். இந்த ராகு- கேது பெயர்ச்சியால் குரு வீட்டை ராகு பார்ப்பதால், சனியும் பார்ப்பதால் தொழில் மேன்மை, வாழ்க்கை முன்னேற்றம், செல்வாக்கு, பெருமை, திறமை, பாராட்டு, பரிசு ஆகிய எல்லா நன்மைகளையும் உருவாக்கும். உலகம் முழுவதும்கூட உங்கள் புகழ் பரவும். குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு பக்கபலமாக அமையும். வேறு எந்தக் குறையும் இல்லை. காரைக்குடி செஞ்சை பகுதியில் நடராஜா தியேட்டர் அருகில் நாகநாத சுவாமி கோவில் வெளிப்புறத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது! அதேபோல திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் அருகிலும் பட்டமங்கலம் என்ற ஊரில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிய சந்நிதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். அங்குசென்று வழிபட்டு வந்தால் எல்லா விமோசனமும் ஏற்படும்.

உத்திரட்டாதி  நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி 11, 12-க்கு அதிபதி. அவருடன்தான் ராகு சேர்ந்திருக்கிறார். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு லாபம், வெற்றி, தேக சுகம், ஆயுள் தீர்க்கம், மக்களுக்கு நல்லகாரியம், தொழில் வளர்ச்சி, புது முயற்சி, செல்வாக்கு, பொன் பொருள் சேர்க்கை, ஆடை ஆபரணச் சேர்க்கை, மக்கள் மத்தியில் பாராட்டு ஆகிய நன்மைகள் உண்டாகும். சிலருக்கு கடல் கடந்து வெளிநாட்டில் பாராட்டு, மதிப்பு, மரியாதை ஆகிய பலன்களும் உண்டாகும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும், குருநாதர் ஜீவசமாதியையும், தண்டபாணியையும், சனீஸ்வரரையும், ஆஞ்ச நேயரையும், பஞ்சமுக விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும், வனதுர்க்கையையும் வழிபடவேண்டும். பதினெட்டுப்படிகள் கடந்து ஐயப்பன் சந்நிதியும், கருப்பரும் உண்டு.

ரேவதி  நட்சத்திரக்காரர்களுக்கு:

ரேவதி புதன் நட்சத்திரம். புதன் 4, 7-க்குடையவர். இந்த ராகு- கேது பெயர்ச்சி தேக சுகம், சௌக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், கல்வி யோகம், பட்டம், பதவி, தொழில் மேன்மை, புதுமுயற்சி வெற்றி ஆகிய எல்லா நன்மைகளையும் தரும். வேலை இல்லாதோருக்கு வேலை, தொழில் இல்லாதோர்க்கு தொழில் அமைப்பும் உண்டாகும். சிலருக்கு தாய்வழி சொத்துகள் கிடைக்கும். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் திருவரங்கம் என்ற ஸ்தலத்தில் ஆதிரங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் சந்நிதிக்கு முந்திய சந்நிதி என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாகக் காட்சியளிப்பது மாதிரியே இங்கும் காட்சியளிக்கிறார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலும் (கோட்டைக் கோவிலில்) பள்ளிகொண்ட பெருமாள் காட்சியளிக்கிறார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள மாதிரி அருள்பாலிக்கிறார். சென்று வழிபடலாம்.


No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...