Skip to main content

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)



துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த ராகு இப்போது ஜென்ம ராசியிலும்; துலா ராசிக்கு 8-ல் இருந்த கேது இப்போது 7-ஆம் இடம் மேஷ ராசியிலும் மாறுகிறார்கள்.

ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடுகள் இல்லை. அதனால் உச்ச, நீச வீடுகளும் இல்லை. ஒருசிலர் ராகு கேதுவுக்கு ஆட்சி, உச்ச, நீச வீடு உண்டு என்றாலும் ஆதாரம் இல்லை. ராகுவும் கேதுவும் சாயாகிரகம்- நிழல் கிரகம். அதற்கு எப்படி சொந்தவீடு அமையும்? நிழல் நிஜமாகுமா? காலையில் சூரியனைப் பார்த்து கிழக்கே நாம் நிற்கும்போது நமது நிழல் மேற்கே விழும். பிற்பகலில் மேற்கே இருக்கும்போது அவரைப் பார்த்து நாம் நிற்கும்போது நமது நிழல் கிழக்கே விழும். நாம் நிஜம்; நிழல் பொய்- மாயை- நிலையற்றது. ஆகவே ராகு- கேதுவுக்கு ஆட்சிவீடு, உச்சவீடு, நீசவீடு இல்லை. ஆனால் பகை கிரகம் - பகைவீடு சொல்லலாம். அவர்கள் எந்தவீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலன் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ தரலாம்.

ஜென்ம ராசி என்பது லக்னம் மாதிரி. லக்னத்துக்குரிய அத்தனை பலன்களும் ஜென்ம ராசிக்கு உண்டு. கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு, புகழ், ஆற்றல், திறமை, பெருமை ஆகியவற்றைக் குறிக்கும். அங்கு நிற்கும் ராகு மேற்சொன்னவற்றை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருவார். ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரன்- ராகுவுக்கு திரிகோணத்திலும் கேந்திரத்திலும் சஞ்சரிக்கும் காலம் மேற்கண்ட யோகங்களை மிகச்சிறப்பாகச் செயல்படுத்துவார். ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அவருக்கு 6, 8, 12-ல் நிற்கும் காலம் ராகுவின் பலன் வேதனைகளையும் சோதனைகளையும் தந்து பிறகு சாதனைகளைச் செய்வார்.

பொதுவாக ஜென்ம ராசியிலோ அல்லது 7-ஆம் இடத்திலோ ராகு- கேது நின்றாலும் பார்த்தாலும் நாகதோஷம் எனப்படும். அதனால் திருமணம் தாமதமாகும், தடையாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமைக்குறைவு, உடல்நலக்குறைவு, பிரிவு, பிளவு ஆகிய துர்ப்பலன்களையும் சந்திக்க நேரும் என்பது பொதுவிதி. ஆனால் ராகு கேதுவுக்கு வீடுகொடுத்த கிரகமோ-அல்லது குருவோ அல்லது துலா ராசிக்கு 5, 9-க்குடைய கிரகமோ சம்பந்தப்பட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜாதக தசாபுக்திகளும் யோகமாக நடந்தால் எல்லா பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர்ந்துவிடும்.

துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி துலா ராசியில் உச்சம் பெறுகிறார். அவருடன் சேரும் ராகுவும் உங்களுக்கு ராஜயோகத்தைத் தருவது உறுதி. எந்த ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தியமும் கிடைக்கிறதோ அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதி எனப்படும். துலா ராசிக்கு சனி 4 (கேந்திரம்) 9- (திரிகோணம்) ஆதிபத்தியம் பெறுகிறார். அதேமாதிரி ரிஷப ராசிக்கும் சனி 9 (திரிகோணம்) 10 (கேந்திரம்) ஆதிபத்தியம் பெறுவதால் ராஜயோகாதிபதி ஆவார். அப்படிப்பட்ட ராஜயோகாதிபதி சனி உச்சம் அடைவது மிகச்சிறப்பு. அவருடன் சேர்ந்த ராகு  கிரகமும் பார்த்த கிரகம் கேதுவும் அந்த ராஜயோகத்தைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

கேதுவின் பார்வை ஜென்ம ராசிக்கும் கிடைப்பதால் எல்லோரும் வணங்கத்தக்க அளவு மதிப்பும் மரியாதையும் கூடும். ஒருசிலரைப் பார்த்தாலே வணங்கத்தோன்றும்- பழகத்தோன்றும். ஒரு சிலரைப் பார்த்தாலே சம்பந்தம் இல்லாமலேயே ஆத்திரம் வரும்; எரிச்சல் வரும்; பார்க்கவே பிடிக்காது. ஒரு சிலரைப் பார்த்தால் அனுதாபம் ஏற்படும்; இரக்கம் உண்டாகும்; ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும்; உபசரிக்கத் தோன்றும். இவை எல்லாம் கிரகங்களின் ஜாலங்கள்.

துலா ராசிக்கு 11-ஆம் இடம் சிம்மத்தை ராகு 3-ஆம் பார்வை பார்க்கிறார். 7-ஆம் இடம் மேஷத்தை ராகு 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். 3-ஆம் இடம் தனுசுவை, ராகு 11-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். கேது, துலா ராசிக்கு 5-ஆம் இடம் கும்பத்தையும்; ஜென்மராசி துலாத்தையும்; 9-ஆம் இடம் மிதுனத்தையும் 11-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார்.

எனவே சகோதரவகையிலும் நண்பர்கள் வகையிலும் சகாயமும் நன்மையும் ஆதரவும் நட்புறவும் ஏற்படலாம். சகோதர ஸ்தானாதிபதி குருவும் ராகுவும் 6 ஷ் 8 ஆக இருப்பதால், ஜாதக ரீதியாக தசாபுக்திகள் பாதகமாக இருந்தாலும், குரு தசை, குரு புக்தி, ராகு தசை, ராகு புக்தி நடந்தாலும் சகோதரர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் சில சில பிரச்சினைகள் உருவாகி மனவருத்தம் ஏற்படலாம். 30 வருடங்களாக பூர்வீக வீட்டை இன்னார் இன்னாருக்கு இது இது பங்கு என்று செட்டில் ஆகி, அண்ணன் பங்கை அவர்கள் அனுபவிக்க, தம்பியும் தம்பி குடும்பத்தாரும் வெளியே வந்துவிட்டார்கள். அண்ணனுக்கு குழந்தை இல்லை; அண்ணன் இறந்துவிட அண்ணனின் சம்சாரம் இரண்டுபேர் பங்கையும் 4 வீடுகளாகத் தடுத்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் என்று வாடகைக்கு விட்டு, எட்டாயிரம் ரூபாய் வாங்கி தம்பி பாகத்துக்கும் தராமல் தானே செலவு செய்துவருகிறார்கள். தம்பிக்காரர் தன்பங்கு தனக்குக் கிடைக்கவேண்டும் என்று கேஸ் போட்டார். அண்ணன் சம்சாரம் வக்கீல் வைத்து, தம்பிசைடு வக்கீலை பணம் கொடுத்து சரிக்கட்டி வாய்தா வாய்தா என்று 18 வருடமாக கேஸை இழுத்தடிக்கிறார். இரண்டு சைடு வக்கீல்களும் பேரம் பேசிக்கொண்டு இரண்டு பார்ட்டியினரிடமும் பணம் பண்ணுகிறார்கள். நீதித்துறையே இப்படி நிதித்துறையாகி விட்டது என்றால் எங்கே நீதி கிடைக்கும்! அரசியல்வாதிகள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணி ஊழல் புரிகிறார்கள் என்றால், காவல்துறையிலும் ஊழல், நீதித்துறையிலும் ஊழல், வைத்தியத் துறையிலும் ஊழல், கல்வித் துறையிலும் ஊழல், ஆன்மிகத்துறையிலும் ஊழல் இப்படி ஊழலைக் கண்டுபிடிக்க ஏற்படுத்திய துறையிலும் ஊழல் என்றால் என்னதான் செய்யமுடியும்? எத்தனை அன்னாஹசாரே வந்தாலும் இதைத் தடுக்கமுடியாது. அவர் குழுவும் கலைக்கப்பட்டது. இந்த நிலைமாற வேண்டுமானால், இரணியனை வதம் பண்ண நரசிம்மர் அவதாரம் எடுத்த மாதிரி, இராவணனை வதம் பண்ண ராமாவதாரம் ஏற்பட்ட மாதிரி கடவுள் ஒரு புது அவதாரம் எடுத்து வரவேண்டும். அப்படி கடவுளே அவதாரம் எடுத்தாலும் அவரையும் இங்குள்ள ஊழல் மன்னர்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள். ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வாங்காவிட்டாலும் ஊழலுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். மழைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வது மாதிரி ஊழலைப் போக்க எல்லோரும் மனதார கூட்டுப் பிரார்த்தனை செய்தால்தான் நிச்சயம் ஊழல் ஒழியும். பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்டவன் விஸ்வரூப அவதாரம் எடுப்பார்.

இப்படி தர்மம் தலைகுனிந்தது எப்போது தெரியுமா? மகாபாரத காலத்தில்தான்! தர்மர் தர்மம் தவறாதவர். அவர் தேரின் சக்கரம் தரையில் பதியாமல் ஓடுமாம். பூமிக்கு மேல் ஒரு அடி உயரத்தில்தான் இருக்கும். துரோணரை யுத்தத்தில் இருந்து வெளியேற்ற கண்ண பரமாத்மா ஒரு சூழ்ச்சி செய்கிறார். துரோணர் மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக தர்மரை ஒரு பொய் சொல்லும்படி கிருஷ்ணர் ஆலோசனை கூறுகிறார். தர்மர் பொய் சொல்லமாட்டேன் என்று மறுக்கிறார். அதனால் "அஸ்வத்தாமா' என்ற பெயருடைய ஒரு யானையை அர்ஜுனன் கொன்றுவிடவே துரோணரிடம் "அஸ்வத்தாமா' இறந்ததாகச் சொல்ல, அவர் நம்பாமல் தர்மர் சொன்னால் நம்புவதாகச் சொல்கிறார். தர்மரும் அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது உண்மை என்கிறார். யானை என்று தர்மர் சொன்னது துரோணரின் காதுகளில் விழாதபடி கிருஷ்ணர் சங்கை ஊதிவிடுகிறார். துரோணர் கையிலிருந்த வில்லை தூக்கி எறிந்துவிட்டு யுத்த களத்திலிருந்து வெளியேறுகிறார். அந்தக்கணமே தர்மரின் தேர்ச் சக்கரம் தரையில் படும்படி இறங்கிவிடுகிறது. அப்போதே தர்மம் இறங்கிவிட்டது. அதற்கு வழி காட்டியே கிருஷ்ணர்தான். அக்காலம்தான் கலியுகமும் பிறந்ததாம். அண்ணன்மேல் மதிப்பும் மரியாதையும் கொண்ட பீமனிடம் கலியுகம் பிறந்துவிட்டதாக நாரதர் ரகசியம் கூற, உடனே பீமன், தர்மரிடம் இதை முதலில் சொல்லவேண்டும் என்று தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே காலில் மிதியடியணிந்து கழற்றாமலேயே தர்மரின் ராஜசபைக்கு வந்து, ""அண்ணா, கலியுகம் பிறந்துவிட்டது'' என்கிறான். தருமரும் ""உன்னைப் பார்த்தாலே புரிகிறது'' என்றாராம். ஆக கலியுகத்தில் இதெல்லாம் சகஜப்பா என்றுதான் போகவேண்டியுள்ளது.

5-ஆம் இடம் புத்திரஸ்தானம். மனசு, திட்டம், எண்ணம் இவற்றை குறிக்கும் இடம். இதற்கு கேது பார்வை கிடைப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகளும், கவலைகளும், செலவுகளும், அவர்கள் சம்பந்தமான காரியங்களில் காலதாமதமும், இடையூறுகளும் ஏற்படலாம். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குரு 5-ஆம் இடத்தை கும்பத்தையும் 5-க்குடைய சனியையும் ராகுவையும் பார்க்கும் காலம் மேற்படி 5-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட துர்ப்பலன்கள் நீங்கி நற்பலன்களாக மாறிவிடும். அதுவரை நம்பிக்கை இழக்காமல் தைரியமாக இருக்கவும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பிள்ளைகளின் கல்வி மேன்மை, தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம், வாரிசுயோகம் போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெற்றோர்- பிள்ளைகளின் உறவும் பலப்படும்.

கேது 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் முதல் கட்டமாக பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் சங்கடங்களும் இருந்தாலும் ஞானகாரகன் பாக்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் நன்மையும் உண்டாகும். 9-ஆம் இடம் தெய்வீக ஸ்தானம், ஆன்மிக ஸ்தானம். கேது ஆன்மிக- ஞானகாரகன் என்பதால் ஆன்மிகத்தொடர்பு உண்டாகும். ஆலய வழிபாடு, தியானப் பயிற்சி, யோகா, மந்திர உபதேசம், தெய்வஸ்தல யாத்திரை, புனிதப் பயணம் ஆகிய பலன்களும் நடக்கும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் கோவில் திருப்பணி கமிட்டிப் பொறுப்பு, தக்கார்பதவி, கௌரவப் பதவி, சமூக நலப்பணி ஈடுபாடு, நற்பணி மன்றச் செயல்களில் ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு ஊனமுற்றோர் நல மறுவாழ்வு, மூத்த குடிமக்கள் பேரவை, முதியோர் காப்பகம், ஆதரவற்றோர் இல்லப் பொறுப்புகளில் ஈடுபாடு ஏற்படலாம்.

இரண்டாம் இடம் வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஸ்தானம். வாக்கு தனகாரகன் குரு எட்டில் மறைந்தாலும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடிக்கு இடமில்லை. எதிர்பாராத தனப்ராப்தி வந்துகொண்டே இருக்கும். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆன்மிக வழியில், ஹோமம்- பூஜை- அன்னதானம் போன்ற வகையில் நன்கொடைகளும் வசூல்களும் பெருமளவில் காணப்படும். நீங்கள் போடும் திட்டங்களும் சாதாரண அளவில் இருக்காது. பிரம்மாண்டமான திட்டங்கள் தீட்டி பிரம்மாண்டமாகவே செயல்படுத்துவீர்கள்.

10 தொழில் ஸ்தானம். அதற்கு 2-ஆம் இடத்தை ராகு பார்ப்பதால் தொழில் துறையில் இருப்பவர்களும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி முன்னேற்றமும் லாபமும் அடையலாம். சிலர் மனைவி பேரில் தொழில் தொடங்கலாம். கம்பெனிகளில் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்கள் நடவடிக்கை மூலமாக நிர்வாகத்தினரின்- மேலதிகாரிகளின்- உரிமையாளர்களின் பாராட்டுக்குரியவர்கள் ஆகலாம். தொழிலாளர்களுக்கும் மேனேஜ் மெண்டாருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கி இரு தரப்பிலும் நற்பெயர் எடுக்கலாம்.

ஒரு சிலரின் அனுபவம் மற்றும் திறமை பற்றி வெளியுலகில் பேசப்பட்டு, வேறு ஸ்தாபனங்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரலாம். கூடுதல் பொறுப்பும் சம்பளமும் தருவதாக பேரம் பேசலாம். ஒரு சிலர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று புதிய இடத்துக்கு மாறலாம். ஒரு சிலர் ஆபத்து நேரத்தில் கைகொடுத்து ஆதரித்த முதலாளியைவிட்டுப் போகக்கூடாது என்று நன்றி விசுவாசம் பாராட்டி செயல்படலாம். அதற்கான வெகுமதியும் உங்களை வந்தடையும். அதற்கு உதாரணம் கர்ணன்தான்.

கர்ணனை சமுதாயம் புறக்கணித்தபோது, துரோணர் ஒதுக்கியபோது, துரியோதனன் அவனுக்கு ராஜ்யத்தையும் தந்து பொறுப்புகளையும் கொடுத்து சம நண்பனாக்கிக் கொண்டான். அந்த நன்றி விசுவாசத்துக்காகவே குந்தி தன் தாய் என்பது தெரிந்தும் துரியோதனனை விட்டு விலகாமல் செஞ்சோற்றுக் கடனாக உயிர்த்தியாகம் செய்தான். அதனால் வரலாற்றிலும் சிறப்பு பெற்றான்.  உங்கள் பங்கிலும் அப்படியொரு இனிய, மறக்கமுடியாத நிகழ்ச்சி ஏற்படலாம். அப்படிப்பட்ட சிறப்பும் பெருமையும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு- குருபார்வை சனிக்கும் ராகுவுக்கும் கிடைக்கும் காலம் எதிர்பார்க்கலாம்.

7-ஆம் பாவத்துக்கு ராகு, கேது., சனி தொடர்பினால், உங்கள் மனைவி மூலமாக சம்பாத்தியம், கடன் ஏற்பட்டு சொந்தவீடு கட்டலாம். ஒரு சில விஷயங்களில் உங்கள் கருத்துக்கும் மனைவியின் கருத்துக்கும் வேறுபாடு ஏற்படலாம். நல்ல மனைவிதான். ஆனால் மாமனார், மைத்துனர்கள் எல்லாம் மனைவி தரப்பில் உங்களை மதிக்காதவர்கள் என்ற காரணத்தால் நீங்கள் எப்போதுமே ஒட்டியும் ஒட்டாமலும், புளியம்பழம் போலவும், தாமரை இலை தண்ணீர் போலவும், பட்டும் படாமலும் இருப்பீர்கள். அதனால் பொறுமையாகப் போய்விடுவீர்கள். இந்தப் பக்கம் தாயார், அந்தப் பக்கம் தாரம். எந்தப் பக்கம் பேசுவது என்று இரண்டு பக்கமும் அனுசரித்துப் போய்விடுவீர்கள்.

மொத்தத்தில் ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களைப் பார்ப்பதால் உங்கள் எதிர்கால கனவுகளை- திட்டங்களை வெற்றிபெறச்செய்யும். பிறந்த வகையில் வசதி வாய்ப்புகளுக்கு குறைவில்லை என்றாலும் மனைவி வகையில் தொழில், வீடு, வாசல், வாகன யோகங்களை அனுபவிக்கலாம். சிலர் பிள்ளைகள் மூலமாக அந்த பாக்கியங்களை அனுபவிக்கலாம். 

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி தனவரவு, குடும்ப சௌக்கியம், திருமண ஏற்பாடு ஆகிய நன்மைகளைச் செய்யும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உபதொழில் யோகமும் செய்தொழில் யோகமும் அமையும். தேக சௌக்கியத்திலும் தெளிவு ஏற்படும். பழனியாண்டவரையும் திரு ஆவினன் குடி முருகனையும் சென்னை வடபழனி முருகனையும் வழிபட வேண்டும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:


சுவாதி ராகுவின் நட்சத்திரம். துலா ராசியில் ராகு நட்சத்திரம். அதனால் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற மாதிரியும் ஜவ்வாது கொஞ்சமாக இருந்தாலும் மணமாக இருப்பது போலவும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அற்புதமாக இருக்கும். வீட்டுக்குள் உங்கள் அருமை பெருமை தெரியாவிட்டாலும் வெளியுலகத்தில் உங்களுக்கு வரவேற்பும் வாழ்த்தும் கிடைக்கும். திண்டிவனம் மயிலம் அருகில் திருவக்கரை சென்று வக்ர காளியம்மளையும் சந்திரமௌலீஸ்வரரையும் மாமுண்டி முனிவர் ஜீவசமாதியையும் வழிபட வேண்டும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

விசாகம் குருவின் நட்சத்திரம். குரு ரிஷப ராசியில் சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். ராகுவும் சுக்கிரன் வீட்டில் இருந்தாலும் குருவும் ராகுவும் 6 ஷ் 8 ஆக இருப்பதால் சில சோதனைகளுக்குப் பிறகும் வேதனைகளுக்குப் பிறகும் ராகு- கேது பெயர்ச்சி நன்மை தரும். துலா ராசிக்கு குரு 3, 6-க்குடையவர் என்பதால் ஒரு காலத்தில் ஓஹோ என்று தொழில் துறையில் ராஜா போல செயல்பட்டவர்கள் இன்று முடிதுறந்த ராஜாவாக மூலையில் முடங்கிக் கிடக்கும் அளவு செயலற்றவராக இருந்தாலும் இந்த ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக குரு மிதுன ராசிக்கு மாறிய பிறகு உங்கள் ராசியைப் பார்க்கும் காலம் இழந்த பதவி, செல்வம், தொழில் எல்லாவற்றையும் மீண்டும் அடையலாம். கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரையும், தென்காசி- செங்கோட்டை பாதையில் (செங்கோட்டை அவுட்டர் தமிழக எல்லை) புளியறை சென்று தட்சிணாமூர்த்தியையும் வழிபடவேண்டும்

 


Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில